கும்பகோணம் அருகில் சாக்கோட்டையில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு செல்லும் பாதை குறுகிய தெருக்கள் வழியாக இருக்கிறது. இதன் காரணமாக அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதனிடையே அப்பள்ளியின் மற்றொரு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடம் இருக்கிறது. அந்த இடம் குறித்து பள்ளி நிர்வாகத்திற்கும், தனி நபருக்கும் பிரச்சனை இருந்து வருகிறது.

இந்த நிலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் பள்ளி செல்ல பாதை அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாஜக மாவட்ட தலைவர் சதீஷ் தலைமையில் நேற்று காலை சாக்கோட்டையில் சாலை மறியல் நடந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அதன்பின் சாலை மறியலில் ஈடுபட்ட 30-க்கும் அதிகமான பாஜகவினர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நேற்றிரவு பா.ஜக. மாவட்ட தலைவர் சதீஷ், மாவட்ட செயலாளர் பசுபதி பாண்டியன், இந்து மக்கள் கட்சி கட்சியை சேர்ந்த குருமூர்த்தி உட்பட 8 நபர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இரவே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்கள் 8 நபர்களையும் வருகிற ஜூலை 11 ம் தேதி வரை புதுக்கோட்டை மாவட்ட கிளைச் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.