இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ முன்னாள் தலைவருமான சௌரவ் கங்குலி, தன்னைச் சுற்றி பரவி வந்த மிகப்பெரிய அரசியல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி டெல்லி அரசியலுக்குச் செல்வதற்காக, பஹரம்பூர் தொகுதி எம்பியான முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதானை தனது பதவியை ராஜினாமா செய்யுமாறு கங்குலி மூலமாகத் தூது அனுப்பியதாக ‘ஆனந்தபஜார் பத்ரிகா’ என்ற நாளிதழில் செய்தி வெளியாகி ஒட்டுமொத்த இந்திய அரசியல் மற்றும் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த செய்தி அப்பட்டமான பொய் என்றும், தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கங்குலி பகிரங்கமாக மறுத்துள்ளார். ​ஊடகங்களுக்கு கங்குலி அனுப்பியுள்ள அதிகாரப்பூர்வ விளக்கத்தில், “மம்தா பானர்ஜி தன்னிடம் எந்த ஒரு செய்தியையும் யூசுப் பதானுக்குக் கொண்டு சேர்க்கச் சொல்லவில்லை என்றும், தான் யூசுப் பதானை அலைபேசி மூலமாகவோ அல்லது நேரடியாகவோ தொடர்பு கொண்டு பேசவே இல்லை” என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

உண்மைத்தன்மையை ஆராயாமல், இப்படி ஆதாரமற்ற வதந்திகளை ஊடகங்கள் பரப்புவது மிகுந்த ஏமாற்றமளிப்பதாகக் குறிப்பிட்ட கங்குலி, செய்தி நிறுவனங்கள் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்று சாடியுள்ளார். தான் அரசியல் விவகாரங்களில் எப்போதுமே தலையிடுவதில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ள கங்குலியின் இந்த அதிரடி அறிக்கை, மம்தா பானர்ஜியின் அரசியல் நகர்வுகள் குறித்த வதந்திகளுக்குப் பலத்த முற்றுப்புள்ளி வைத்துள்ளது.