நாமக்கல் மாவட்டத்திலுள்ள மரூர்பட்டியில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜா என்ற மனைவி உள்ளார். கடந்த 15-ஆம் தேதி சரோஜா அப்பகுதியில் இருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரிடம் பணம் எடுத்து தருமாறு உதவி கேட்டார். அவர் ஏ.டி.எம் எந்திரத்தில் போட்டு பார்த்துவிட்டு பணம் வரவில்லை என கூறி வேறு ஒரு ஏ.டி.எம் கார்டை கொடுத்துள்ளார்.

சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து 1 லட்சத்து 22 ஆயிரத்து 500 ரூபாய்  எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதுகுறித்து சரோஜா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் மோசடியில் ஈடுபட்டது கொசவம்பட்டியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான சிவ சண்முகம் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.