கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று காலை தூளிப்பட்டியை சேர்ந்த காளியப்பன் என்பவர் வந்து உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அந்த விசாரணையில் காளியப்பன் கடந்த 2021-ஆம் ஆண்டு தனது மகனுக்கு ஊர் பொது கோவிலில் வைத்து திருமணம் செய்து வைக்க முயன்றார். அப்போது சிலர் ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதால் பொதுக் கோவிலில் நீங்கள் திருமணம் செய்ய கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து காளியப்பன் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் சம்பந்தப்பட்ட நபர்கள் அவரை தாக்கி மிரட்டியதாக தெரிகிறது. இதனால் காயமடைந்த காளியப்பன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இது தொடர்பாக காளியப்பன் மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மன உளைச்சலில் காளியப்பன் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.