திருச்சி மாவட்டத்தில் உள்ள வேளகாநத்தம் கிராமத்தில் தங்கவேல்(67) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் முசிறி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் காற்றின் வேகத்தால் வேளகாநத்தம் கிராமத்தில் மின் கம்பி அறுந்து விழுந்தது. அப்போது தங்கவேல் எதிர்பாராதவிதமாக கீழே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தார்.

இதனால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே தங்கவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தங்கவேலின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.