மத்திய பிரதேசத்தில் உஜ்ஜை மாவட்டத்தில் தயாராம் பரோட் என்ற விவசாயி வசித்து வந்தார். இவர் நேற்று அவரது பண்ணை வீட்டில் இருந்த நிலையில் அவரது உறவினரான தீபக் என்பவர் தயாராம் செல்போனில் தொடர்பு கொண்டு உள்ளார். ஆனால் செல்போன் அனைத்து வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் சந்தேகம் அடைந்த தீபக் தயாராமின் பண்ணை வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டில் தயாராம் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அவரது உடலில் காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரது செல்போன் மற்றும் சார்ஜ் போட்டு இருந்த ஸ்விட்ச் போர்டும் சேதமடைந்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தயாராமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தயாராமின் கழுத்து, மார்பு, முகம் போன்ற பகுதிகளில் காயம் இருந்ததாகவும் செல்போன் மற்றும் சார்ஜ் கேபிள் கருகியிருந்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர். அதனால் செல்போன் சார்ஜ் போட்டு இருக்கும்போது வெடித்ததில் அவர் இறந்திருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர். இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.