பாகிஸ்தானில் புலி வளர்த்து வரும் சமூக வலைதளப் பிரபலம் ஒருவரின் வீட்டில், புலி ஒன்று சிறுவனை மீட்டதாகப் பரவும் காணொளி இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 1-ஆம் தேதி அன்று பகிரப்பட்ட இந்த வீடியோவில், புலி அடைக்கப்பட்டிருந்த கூண்டுக்குள் தவறி விழுந்த ஒரு சிறுவனை, அந்தப் புலி தனது பற்களால் கவ்வித் தூக்கி வெளியில் இருந்தவர்களிடம் ஒப்படைக்கும் நெகிழ்ச்சியான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

 

இதனைப் பார்த்த லட்சக்கணக்கான பயனர்கள் அந்தப் புலியின் மனிதாபிமானத்தைப் பாராட்டி வந்தனர். இருப்பினும், இது உண்மையான விபத்து அல்ல என்றும், பாகிஸ்தானைச் சேர்ந்த நுமான் ஹாசன் என்ற பிரபலம் தனது வளர்ப்புப் புலி மற்றும் உறவினரான சிறுவனை வைத்துத் திட்டமிட்டுப் படமாக்கிய ஒரு நாடகக் காட்சி என்றும் தற்போது தெரியவந்துள்ளது. இக்கட்டான சூழலில் புலி அன்பாக நடந்துகொள்வது போன்ற பிம்பத்தை உருவாக்குவதற்காக இத்தகைய ‘ஸ்கிரிப்ட்’ செய்யப்பட்ட வீடியோக்கள் உருவாக்கப்படுவதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.