வாழ்க்கையின் மிக முக்கியமான நினைவுகளாகக் கருதப்படும் திருமணப் புகைப்படங்கள், பணத் தகராறு காரணமாகச் சாம்பலான சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஒரு திருமண விழாவில் புகைப்படங்கள் எடுத்த போட்டோகிராபருக்கு, மணமகன் வீட்டார் பேசிய தொகையை முழுமையாகக் கொடுக்காமல் இழுத்தடித்ததாகக் கூறப்படுகிறது.

பலமுறை கேட்டும் பணம் வராததால் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற அந்த போட்டோகிராபர், கஷ்டப்பட்டுத் தான் தயாரித்த அந்த அழகான திருமண ஆல்பத்தை நடுத்தெருவில் வைத்துத் தீயிட்டு எரித்துள்ளார்.

மணமக்களின் சிரித்த முகங்களுடன் இருந்த அந்தப் புகைப்படங்கள் ஒவ்வொன்றாகத் தீயில் கருகும் வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்துத் தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். “ஒருவரின் உழைப்பிற்கு உரிய ஊதியத்தைச் சரியான நேரத்தில் கொடுக்காவிட்டால் இப்படித்தான் நடக்கும்” என ஒரு தரப்பினர் போட்டோகிராபருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.

அதேசமயம், “எவ்வளவு கோபம் இருந்தாலும் ஒரு ஜோடியின் வாழ்நாள் நினைவுகளை இப்படி அழிப்பது முறையல்ல” என மற்றொரு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

உழைப்புக்குக் கூலி கொடுக்காதவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும் என இணையவாசிகள் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.