ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள நதிக்கரையில், எதிர்பாராத விதமாக ஒரு குரங்கை முதலை ஒன்று கவ்வி இழுக்க முயன்றது.

வழக்கமாக முதலையைக் கண்டால் மற்ற விலங்குகள் சிதறி ஓடும், ஆனால் இங்கு நடந்ததோ வேறு. தனது கூட்டத்தைச் சேர்ந்த ஒரு குரங்கு ஆபத்தில் இருப்பதை உணர்ந்த ஒட்டுமொத்த குரங்குப் படையும், முதலையைச் சூழ்ந்துகொண்டு பயங்கரமாகக் கூச்சலிட்டுப் போராடின. உயிரைப் பணயம் வைத்து அவை காட்டிய இந்த ஒற்றுமை, பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

குரங்குகள் கூட்டமாக வந்து முதலையைச் சூழ்ந்து கொண்டு மிரட்டியதால், நிலைதடுமாறிய அந்தப் பயங்கர முதலை, கவ்வி வைத்திருந்த குரங்கை விட்டுவிட்டு ஆற்றுக்குள் பின்வாங்கியது.

காயமடைந்த தனது நண்பனை பத்திரமாக மீட்ட குரங்குப் படை, பிறகு அங்கிருந்து நகர்ந்தன. “ஆபத்து காலங்களில் மனிதர்களே ஒருவரை ஒருவர் கைவிடும் நிலையில், இந்தக் குரங்குகளின் ஒற்றுமை மனிதர்களுக்கு ஒரு பெரிய பாடம்” என நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து புகழாரம் சூட்டி வருகின்றனர்.