சென்னை கோயம்பேட்டில் சேமாத்தம்மன் நகர் உள்ளது. இந்த பகுதியில் தேவேந்திரன் (48) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இரவு நேரத்தில் தள்ளு வண்டியில் டிபன் வியாபாரம் செய்து வருகிறார். ‌இந்நிலையில் இவரின் கடைக்கு நன்கொடை கேட்டு, சேமாத்தம்மன் நகரை சேர்ந்த முத்து (27) என்பவர் வந்துள்ளார்.

இவர் 127-வது வட்ட தி.மு.க. இளைஞரணியின் துணை அமைப்பாளராக உள்ளார். இவருடன் இணைந்து இவரது நண்பர் விஸ்வநாதன்(28) என்பவரும் வந்து, ஐயப்பன் பூஜை இருப்பதால் நன்கொடை கேட்டுள்ளனர். அப்போது தேவேந்திரன் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த முத்து அவரது தள்ளுவண்டி கடையை அடித்து நொறுக்கினார்.

மேலும் கடையில் இருந்த பொருட்களை எல்லாம் தள்ளிவிட்டு தேவேந்திரனையும் தாக்கியுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து முத்து தாக்கியதால் தேவேந்திரன் காயமடைந்து, கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன்பின் வழக்கு பதிவு செய்த போலீசார் முத்து மற்றும் அவரது நண்பரான விஸ்வநாதன் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.