ராமநாதபுரம் , திருவாடானை தாலுகா ஓரியூர் கிராமத்தில் ஓரியூர் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் அங்குள்ள கோட்டை மகாலிங்க மூர்த்தி சுவாமி கோவிலுக்கு அருகே  தரைமட்ட நீர்தேக்க தொட்டி கட்டுவதாக திட்டமிடபட்டது. அதன்படி பொக்லைன் எந்திரம் மூலம் அவ்விடத்தில் பள்ளம் ஒன்று தோண்டப்பட்டபோது பூமிக்கு அடியில் செங்கல்லால் ஆன சுவர் இருப்பதை பார்த்துள்ளனர். உடனே தொல்லியல் துறை இதனை ஆய்வு செய்யுமாறு அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் இது குறித்து ஓரியூர் முன்னாள் ஊராட்சி தலைவர் புலியூர் வெங்கடேசன் கூறியுள்ளதாவது, ஓரியூரில் சங்க கால மன்னனால் கட்டப்பட்ட மண் கோட்டை ஒன்று இருந்ததாகவும், அவரைத் தொடர்ந்து இப்பகுதியை பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். அப்போது இவ்விடத்தில் ஒரு கோட்டையை  கட்டி அரசாட்சி நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து இக்கோட்டையில் சேதுபதி மன்னர்கள் ஒரு அரண்மனையை உருவாக்கியுள்ளதாகம், அதற்கான சான்றாக, இங்கு சிதைவுற்ற  இக்கோட்டை உள்ளது. மேலும் இக்கோட்டையை தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஏற்கனவே பலமுறை ஆய்வு செய்து கல்வெட்டுகள் கண்டுபிடித்துள்ளனர். அந்த வகையில் இந்த செங்கல் சுவர் இக்கோட்டையின் ஒரு பகுதியாக இருக்கலாம் எனவும் அதை ஆய்வு செய்து பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.