திருவண்ணாமலை மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் வருகிற 13- ஆம் தேதி தொடங்குகிறது. இவ்வறிவிப்பை  அம்மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, விளையாட்டு போட்டிகள் 2022-23-ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் 5 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் பங்குபெறுவதற்கு இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். அந்த நபர்களுக்கு மட்டும் மாவட்ட விளையாட்டு அரங்கில் இப்போட்டிகள் நடைபெறும். மேலும் திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் வைத்து ஆண்களுக்கான கிரிக்கெட் விளையாட்டு போட்டி நடைபெறும். பின் பெண்களுக்கான கிரிக்கெட் விளையாட்டு போட்டி ஜீவா வேலு பன்னாட்டு மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கும். இதனையடுத்து கால்பந்து விளையாட்டு போட்டியானது ஆண்களுக்கு டேனிஷ் மிஷின் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில்  நடைபெற உள்ளது.

இந்நிலையில் வருகிற 13-ந் தேதி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடங்கி, 13-ந் தேதி அன்று அரசு ஊழியர்களுக்கு மட்டும் கபடி, தடகளம், இறகுப்பந்து, கையுந்து பந்து, செஸ் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. பின் 14-ந்தேதி மாற்றுதிறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. மேலும் பிப் 22-ந் தேதி மற்றும் 23-ந் தேதி ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தடகள போட்டிகள் நடைபெற உள்ளது. இதன் பின் 25-ந்தேதி நீச்சல் (ஆண்களுக்கு), கால்பந்து, கூடைப்பந்து போட்டிகளும், 26-ந்தேதி வாலிபால், மேசைப்பந்து, கபடி, நீச்சல் (பெண்களுக்கு) நடைபெற உள்ளது. மேலும் 26-ந்தேதி பொது பிரிவினர்களுக்கு கபடி, வாலிபால் ஆகிய போட்டிகளும், பிப் 27 மற்றும் 28-ந் தேதி பள்ளி, கல்லூரி மற்றும் பொது பிரிவினர்களுக்கு கிரிக்கெட் போட்டியும் நடைபெற உள்ளது. இது குறித்த மேலும் தகவலுக்கு  04175-2533169 என்ற எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.