கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் சிவக்குமார் நகர் பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் இரண்டு பெண்களின் உடல் கிடப்பதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடல்களை கைப்பற்றி ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர்கள் ஓசூர் எஸ்.பி.எம் காலனிடை சேர்ந்த சின்னம்மா(65), அவரது மகள் சுசீலா(38) என்பது தெரியவந்தது.

கடந்த 5 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற சுசீலாவின் கணவர் வெங்கடேசப்பா வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இது தொடர்பாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் கேட்டபோது வெங்கடேசப்பா திருப்பதிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றதாக அவர்கள் தெரிவித்தனர். இதனை தங்களிடம் கூறவில்லையே என சுசீலாவும், அவரது தாயும் மன உளைச்சலில் இருந்தனர். பின்னர் தாய், மகள் இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.