கும்பகோணத்தில் உள்ள மகாமக குளம் இந்தியாவில் உள்ள புனித தீர்த்த தளங்களில் ஒன்றாக விளங்குகிறது. கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோவில் அருகே இந்த குளம் அமைந்துள்ளது. வருடம் தோறும் நடைபெறும் மாசிமக திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு இந்த குளத்தில் புனித நீராடுவார்கள். மாசி மகத்தை முன்னிட்டு மகாமக குளத்தை சுற்றி சைவ, வைணவ தளங்களில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் சிவன் பெருமாள் கோவில்களில் திருவிழா  தொடங்கி நடைபெற்று வருகிறது.

வருகிற 6-ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மாசிமக தீர்த்தவாரி மகாமக குளத்தில் நடைபெற உள்ளது. இந்த தீர்த்தவாரியை முன்னிட்டு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக மாசி மக குளத்தில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றி தண்ணீரை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மகாமக குளத்தின் படிக்கட்டுகளில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணிகளில் 50-க்கும் மேற்பட்ட மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் நேற்று ஈடுபட்டுள்ளனர்.