சேலம் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் கிராமத்தில் பட்டதாரியான விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் புரோக்கர் தொழில் செய்து வருகிறார். விஜயகுமாருக்கு தமிழ் செல்வி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் விஜயகுமாருக்கு 22 வயதுடைய பட்டதாரி இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் கடந்த 1 1/2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். கடந்த 4-ஆம் தேதி தமிழ்ச்செல்வியிடம் “பழனி மலைக்கு பாதயாத்திரையாக செல்கிறேன்” என்று கூறி விட்டு விஜயகுமார் வீட்டில் இருந்து புறப்பட்டார்.

ஆனால் பாதயாத்திரை செல்லாமல் தான் காதலித்த இளம்பெண்ணை புதுச்சத்திரம் அருகே இருக்கும் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். மேலும் தமிழ்ச்செல்வியிடம் நான் இந்த பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டேன் என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தமிழ்ச்செல்வி தனது கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.