ஊட்டி மாவட்டத்தில் உள்ள காந்தல் மேல்போகி தெருவில் கூலி வேலை பார்க்கும் சிவராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சிவராஜ் போதையில் வீட்டிற்கு வந்தார். இதனால் கோபத்தில் சிவராஜின் மனைவி தனது குழந்தைகளுடன் கேரளாவில் இருக்கும் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் சிவராஜ் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சிவராஜ் வீட்டிலிருந்து கரும்புகை வெளியேறியதால் அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது படுக்கை அறையில் தீயில் கருகி சிவராஜ் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்ததில் மதுபோதையில் சிவராஜ் சிகரெட் துண்டை அணைக்காமல் கீழே வீசியுள்ளார். இதனால் படுக்கையில் தீ பிடித்து தூங்கிக்கொண்டிருந்த சிவராஜ் உடல் கருகி உயிரிழந்தது தெரியவந்தது. இருப்பினும் சந்தேக மரணம் என போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.