குமரி மாவட்டத்தில் தக்கலை மணவாளக்குறிச்சி அருகே உள்ள வடக்கன்பாகத்தில் ஆறுமுக பெருமாள் (63) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி பிரேமலதா (58) . சென்னையில் என்ஜினீயராக பணியாற்றி, பின் ஓய்வு பெற்ற இவருக்கு ஆதவன் (32), மாலன் (28) என்ற 2 மகன்கள் உள்ளது. மகன்கள் இருவரும் திருமணமாகி சென்னையில்  தங்களது குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் ஆறுமுக பெருமாளும், பிரேமலதாவும் தங்களின் சொந்த ஊரான மணவாளகுறிச்சியில் தனியாக வசித்து வந்தனர். இதனையடுத்து  மூத்த மகன் ஆதவன் சென்னையில் தனியாக ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தார்.

கொரோனா பரவலின் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக அந்த நிறுவனம்  நஷ்டத்திற்கு உள்ளானது. இதனால் லட்ச கணக்கில் கடன் ஏற்பட்டு, அதை அடைக்க முடியாமல் ஆதவன் தவித்துள்ளார்.அப்போது தனது தந்தையிடம் உதவி கேட்டுள்ளார். உடனே தந்தையும் தனது குடும்ப சொத்தை விற்றாவது மகனுக்கு பணம் தருவதாக கூறியுள்ளார். ஆனால் சொத்தை  விற்க விலை பேசப்பட்டு முன்பணமும் வாங்கிய நிலையில், குறித்த நேரத்தில் பத்திரப்பதிவு செய்யப்படவில்லை என தெரிகிறது. இதனால் தகுந்த நேரத்தில் மகனின் கடனை அடைக்க பணம் கொடுக்க முடியவில்லையே என தம்பதியினர் மனவருத்தத்தில் இருந்தனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று ஆதவன் தனது பெற்றோரிடம் பேசுவதற்காக செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர்கள் தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை. உடனே ஆதவன் தனது உறவினர்களிடம் நடந்ததைக் கூறி, தனது தந்தையின் வீட்டிற்கு போய் பார்க்கும்படி கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் அங்கு சென்று பார்த்த போது, முன்பக்க கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்த நிலையில், அவர்களை அழைத்துப் பார்த்தும் எந்தவித பதிலும் வரவில்லை. அதன் பிறகு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது,  ஆறுமுக பெருமாள் மற்றும் அவரது மனைவி இருவரும் வாயில் நுரைத் தள்ளியபடி ,தரையில் பிணமாக கிடந்தனர்.

மகனின் கடனை அடைக்க முடியாத துயரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதனையடுத்து இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின் வழக்கு பதிவு செய்த போலீசார்  விசாரணை நடத்தி வருகிறார்கள்.