மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குடியிருப்பில், இருசக்கர வாகன தலைக்கவசத்திற்குள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய நல்ல பாம்பு ஒன்று பதுங்கியிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாக்பூரின் மானவ் சேவா நகர் பகுதியில் வசிக்கும் மிடாலி சதுர்வேதி என்பவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த தலைக்கவசத்தில் இருந்து மதியம் சுமார் 2 மணியளவில் விசித்திரமான சீறல் சத்தம் கேட்டுள்ளது.
View this post on Instagram
சந்தேகமடைந்த குடும்பத்தினர் அதனைச் சோதித்தபோது, தலைக்கவசத்தின் உட்புற உறையில் நல்ல பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். இதுகுறித்துத் தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டதால் அப்பகுதியே பரபரப்பாகக் காணப்பட்டது. இதையடுத்து, வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த பாம்பு பிடி நிபுணர் சுபம் விரைந்து வந்து, சுமார் நான்கு அடி நீளமுள்ள அந்தப் பாம்பைப் பத்திரமாக மீட்டு அடர்ந்த காட்டுப்பகுதியில் விடுவித்தார்.
மழைக்காலங்களில் பாம்புகள் வெப்பத்தைத் தேடி வீடுகள் மற்றும் வாகனங்களுக்குள் தஞ்சம் புகுவதால், பொதுமக்கள் தலைக்கவசம் மற்றும் காலணிகளை அணியும் முன்பு அவற்றை நன்கு சோதித்துக் கொள்ளுமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
