கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலையில் மத்திய மந்திரி அமித்ஷா இன்று வாகனத்தில் ரோடு ஷோ சென்றார். அவர் கன்னியாகுமரி நாடாளுமன்ற வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் நந்தினி ஆகியோருக்கு ஆதரவு திரட்டினார். அவர் பிரச்சாரத்தில் பேசியதாவது, பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தின் மரியாதை மற்றும் புகழை உலகம் முழுவதும் கொண்டு செல்ல முயற்சி செய்து வருகிறார். உங்களிடம் தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைக்கும் போது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.

ஆனால் இன்னும் 3 மற்றும்‌ 4 ஆண்டுகளுக்குள் இதே இடத்தில் நான் தமிழில் பேச முயற்சி செய்வேன். தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக கட்சிகள் ஊழல் செய்து வளர்ச்சியை தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். திமுகவினர் அயோத்தியில் ராமர் கோவில் கட்டியது மற்றும் சனாதன தர்மத்தை பற்றி இழிவாக பேசி இந்துக்கள் மனதை புண்படுத்தியுள்ளனர். பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேசம் வளர்ச்சி பெறும். நீங்கள் மீண்டும் 3-வது முறையாக பொன். ராதாகிருஷ்ணனை தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் தாமரை சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றி பெற செய்ய வேண்டும். மேலும் இடைத்தேர்தலிலும் வேட்பாளர் நந்தினிக்கு வாக்களித்து அவரையும் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கூறினார்..