முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 1:0 என முன்னிலை வகிக்கிறது.

இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டி20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 3:1 என்ற கணக்கில் இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் இருக்கும் பர்சபரா ஸ்டேடியத்தில் மதியம் 1:30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இதில் இலங்கைக்கு எதிரான முதல் டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்ட கேப்டன் ரோஹித் சர்மா, கோலி, கே.எல் ராகுல் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பினர்.

இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷானகா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 67 பந்துகளில் 83 ரன்களும், சுப்மன் கில் 60 பந்துகளில் 70 ரன்களும் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து விராட் கோலி – ஷ்ரேயஸ் ஐயர் ஜோடி சேர்ந்தனர். பின் ஷ்ரேயஸ் ஐயர் 28 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த கே.எல் ராகுல் தன் பங்குக்கு 39 ரன்கள் குவித்து அவுட் ஆனார். இதனிடையே கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

அதனைத்தொடர்ந்து வந்த ஹர்திக் பாண்டியா 14 , அக்சர் படேல் 9 ரன்களிலும் அவுட் ஆகினர். இருப்பினும் மறுமுனையில் கோலி அற்புதமாக ஆடி அதிரடி சதத்தை விளாசினார். பின் 49ஆவது ஓவரில் 87 பந்துகளில் (12 பவுண்டரி, 1 சிக்ஸர்) 117 ரன்கள் குவித்த விராட் கோலி ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 373 ரன்கள் குவித்தது. ஷமி 4, சிராஜ் 7 ரன்னுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். இலங்கை அணியில் அதிகபட்சமாக ரஜிதா 3 விக்கெட்டுகளும், மதுஷங்கா  கருணாரத்னே, ஷானகா, டி சில்வா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இப்போட்டியில் சதம் விளாசியதன் மூலம் விராட் கோலி தனது 45 வது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டின் சதத்தை பதிவுசெய்தார். ஒட்டுமொத்தமாக கோலிக்கு இது 73ஆவது சதமாகும். அதேசமயம் உள்நாட்டில் (சொந்த மண்ணில்) சச்சினுக்கு அடுத்தபடியாக 20 சதங்களை அடித்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார். இதனால் சச்சின் சாதனையை சமன் (20 சதம்) செய்தார்.

இதையடுத்து இலங்கை அணியின் துவக்க வீரர்களாக  நிசாங்கா மற்றும் அவிஷ்கா பெர்னாண்டோ இருவரும் களமிறங்கினர். இதில் பெர்னாண்டோவை 5 ரன்னிலும், அடுத்து வந்த குசால் மெண்டிசை 0 ரன்னிலும் முகமது சிராஜ் அவுட் செய்து வெளியேற்றினார். பின் வந்த அசலங்கா மற்றும் நிசாங்கா இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி சிறிது நேரம் தாக்குப்பிடித்த நிலையில், அசலங்கா 23 ரன்னில் உம்ரான் மாலிக் பந்துவீச்சில் அவுட் ஆனார். இலங்கை அணி 14 ஓவரில் 64 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்தது.

இதையடுத்து தனஞ்செயா டி சில்வா மற்றும் நிசாங்கா இருவரும் கைகோர்த்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நிசாங்கா அரைசதம் கடந்தார். இதையடுத்து அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டி சில்வா 47(40) ரன்னில் அவுட் ஆனார். அதன் தொடர்ச்சியாக நிசாங்காவும் 72(80) ரன்னில் அவுட் ஆனார். பின் கேப்டன் ஷானகா – ஹசராங்கா ஜோடி சேர்ந்து ஆடினர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த நிலையில் ஹசரங்கா 16, அடுத்து வந்த துனித் வெல்லலகே 0, கருணாரத்னே 14 என அடுத்தடுத்து அவுட் ஆகினர். இலங்கை 206/8 என இருந்தது. பின் ரஜிதா – ஷானகா ஜோடி சேர்ந்தனர்..

மிடில் பேட்டர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தபோதிலும் ஒரு முனையில் கேப்டன் ஷானகா மட்டும் தனி ஒரு ஆளாக போராடி அரைசதம் அடித்தார். தொடர்ந்து ஷானகா சிறப்பாக ஆடினார். ஷமி வீசிய இறுதி ஓவரின் 5ஆவது பந்தில் பவுண்டரி அடித்து தனது 2ஆவது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார் ஷானகா. இலங்கை அணி தோற்றாலும் கேப்டன் சதம் அடித்தது அந்நாட்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது. ஷானகா 88 பந்துகளில் (12 பவுண்டரி, 3 சிக்ஸர்) 108* ரன்களுடனும், ரஜிதா 9* ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 306 ரன்கள் குவித்தது. இதனால் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணியில் அதிகபட்சமாக உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளும், முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளும், முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா, சாஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.