ஹரியானா மாநிலம் கைதல் மாவட்டத்தில் உள்ள சிக்னஸ் என்ற தனியார் மருத்துவமனையில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அறுவைச் சிகிச்சைக்குப் பின் ஐ.சி.யூவில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் நோயாளி ஒருவர், இரவில் தனிமையில் இருந்தபோது மருத்துவமனை ஊழியரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் தனது கணவரிடம் கூறியதும், அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டப்பட்ட ஆஷிஷ் என்ற ஊழியரை அடித்து உதைத்தனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவல் பெற்றதும், சிவில் லைன்ஸ் காவல் நிலையம் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, குற்றம் சாட்டப்பட்ட ஊழியரைக் கைது செய்தது.
இதனுடன், டி.எஸ்.பி குர்விந்தர் சிங் நேரில் வந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர், மருத்துவமனை நிர்வாகம் மற்றும் ஊழியர்களுடன் பேசிச் சூழலை மதிப்பீடு செய்தார். பாதிக்கப்பட்ட பெண்ணின் குழந்தை பிரசவத்தின் போது உயிரிழந்ததாகவும், பெண் தற்போதும் சிகிச்சையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மருத்துவமனை நிர்வாகம் இந்த சம்பவம் குறித்து பதிலளித்துள்ளது. பொது மேலாளர் சுரேந்திர கெண்டல், “எங்கள் மருத்துவமனை எந்த வகையிலும் குற்றவாளிகளை ஆதரிக்காது. சம்பவம் தெரியவந்த உடனேயே காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” எனக் கூறினார். கடந்த காலத்திலும் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதேபோன்ற சம்பவம் நடந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
