ஆங்கிலேயர் உருவாக்கிய நியமனப்பதவியில் வெட்கமின்றி அமர்ந்து கொண்டு இருக்கின்றார் ஆளுநர் ஆர்.என் ரவி என திமுக பொருளாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர் பாலு காட்டமான அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் மாளிகையே அடைக்கிடு வாயை என்ற தலைப்பில் திமுகவினுடைய பொருளாளர்,  டி.ஆர் பாலு, கடுமையான கண்டன அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றார். அதில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அவர்கள்,  தொடர்ந்து மக்கள் வரிப்பணத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து,  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அவமானப்படுத்தக்கூடிய வகையிலே பல்வேறு தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றார்

தமிழக அரசு சட்டமன்றத்திலே நிறைவேற்றிய நீட் விலக்கு உள்ளிட்ட பல மசோதாக்கள் ஆளுநர் மாளிகை ராஜ் பவனிலே குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருக்கிறது.  அந்த சட்டம்  முன் வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய ஆளுநர் ஆர்.ரவி அவர்கள்,  தன் பொறுப்பை நிறைவேற்றாமல், மக்கள் வரிப்பணத்தில் ஊர் ஊராக சுற்றி, நிகழ்ச்சிகளை நடத்தி ….மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும்,  தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்கு எதிராகவும் தொடர்ந்து பேசி  வருகின்றார்.

தமிழ்நாடு என்று சொல்லாதீர்கள். தமிழகம் என்று சொல்லுங்கள் என்றெல்லாம் தொடர்ந்து பேசி வருகின்றார். சமஸ்கிருதத்தை முன்வைத்து தமிழை பின் தள்ளக்கூடிய வேலைகளில் தமிழக ஆளுநர் ஆ.என் ரவி ஈடுபட்டு வருகிறார்.வெள்ளையனை எதிர்த்து வீர போர் புரிந்து உயிரை துச்சமென நினைத்து மரணத்தை முத்தமிட்ட, மருது சகோதரர்கள் தியாகத்தை தமிழ்நாடு அரசு போற்றி வரக்கூடிய நிலையில்,  ஆளுநர் ரவி அவர்கள் தமிழக அரசின் மீது தவறான குற்றச்சாட்டை முன் வைத்திருக்கின்றார்.

தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்ட தியாகிகளின் வரலாற்றை தேடிப் பார்த்தாலும் அவருக்கு எதுவுமே கிடைக்கவில்லையாம் என்று டிஆர் பாலு தன்னுடைய அறிக்கையிலே குறிப்பிட்டிருக்கின்றார். புலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன்,  மருது சகோதரர்கள்,  வேலு நாச்சியார், வீரன் அழகுமுத்து கோன்  இவர்களை தமிழக அரசு போற்றி வருகின்றது. அவர்களுடைய பிறந்தநாள் உள்ளிட்ட பல விஷயங்களை  தமிழ்நாடு அரசு கொண்டாடி வருகிறது

மருதுபாண்டியர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாற்றை சித்தரிக்கும் ஊர்திகளை குடியரசு தின விழா அணிவகுப்பில் சேர்க்க முடியாது என மறுத்தது மத்திய பாஜக அரசு. இப்படி  தமிழக அரசு தமிழ்நாட்டில் விடுதலைக்காக போராடிய அத்தனை தலைவர்களுக்கும் மணிமண்டபம் கட்டுவது, அவர்களுக்கு என்னென்னெ புகழ் சேர்க்க வேண்டுமோ அவற்றையெல்லாம் தொடர்ந்து சேர்த்துக்கொண்டு தான் இருக்கின்றது.  வ.உ.சி செக்கிழுத்த நினைவு சின்னம், விடுதலை போராட்ட தியாகிகளுக்கு இலவச பேருந்து பயணம் என தமிழக அரசு எந்த இடத்திலும் சுதந்திரத்திற்காகக் போராடிய வீரர்களின்

வீரத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்று சேர்க்க கூடிய விஷயத்திலும் எங்குமே சுணக்கமாக இல்லை. தொடர்ந்து அவர்களுக்கான உரிய மதிப்பு கொடுக்கப்பட்டு வருகின்றது.  இவற்றையெல்லாம் பார்க்காமல் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி வேண்டும் என்றே தமிழக அரசுக்கு எதிராகவும்,  தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு எதிராகவும் தொடர்ந்து அவர் செயல்பட்டு வரக்கூடிய இந்த போக்கை கடுமையாக கண்டிப்பதாக டி.ஆர் பாலு தன்னுடைய அறிக்கையில்  குறிப்பிட்டு இருக்கின்றார்.

ஆளுநர் மாளிகையே  தன்னுடைய வாயை அடக்க வேண்டும். பிரிட்டிஷ் ஆட்சியர்கள் உருவாக்கிய கவர்னர் என்ற நியமன பதவியில் உட்கார்ந்து கொண்டு தொடர்ந்து பொய்களை பேசுகிறார். திருக்குறளை எல்லாம் மேற்கோள் காட்டும் ஆளுநர் ஆ.என் ரவி தமிழ்நாட்டினுடைய வரலாற்றை முழுமையாக படித்து புரிந்து கொள்ள வேண்டும். அவர் வகிக்கக்கூடிய பதவிக்கு இப்படி பொய் பேசுவது சரியானது அல்ல என்றும் டி.ஆர் பாலு அவர்கள் தன்னுடைய கடுமையான  விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.