நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கடந்தப்பட்டி பகுதியில் தங்கராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜா(67) என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் சரோஜா அண்ணா நகரில் இருக்கும் உறவினரான பாக்கியலட்சுமி(71) வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் சரோஜாவும், பாக்கியலட்சுமியும் ரத்த பரிசோதனை மற்றும் சர்க்கரை பரிசோதனை செய்வதற்காக தனியார் ஆய்வகம் நோக்கி போயேரிகரை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் தங்களை போலீஸ் என அறிமுகப்படுத்தி கொண்டனர்.

இதனையடுத்து வயதான காலத்தில் கழுத்தில் தங்க நகைகளை அணிந்து செல்வது பாதுகாப்பு இல்லை என கூறி, நீங்கள் அணிந்திருக்கும் நகைகளை கழற்றி மணி பர்சில் போடுங்கள் என அவர்கள் கூறியுள்ளனர். இதனை நம்பி சரோஜா தான் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை கழற்றி கொடுத்துள்ளார். கண்ணிமைக்கும் நேரத்தில் தங்க நகையை அபேஸ் செய்துவிட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து சரோஜா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.