நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் காமாட்சி அம்மன் கோவில் தெருவில் தினேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஈரோட்டில் இருக்கும் ஜவுளி கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தினேஷ்குமார் மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இவர் ஈரோடு அரசு மருத்துவமனை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் பாலத்தின் தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது.

இதனால் தினேஷ்குமார் சவிதா சிக்னல் பகுதியில் தூக்கி வீசப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தினேஷ்குமாரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.