திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேசையாபுரத்தில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மேளம் அடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது 3-வது மகன் ராஜ செல்வம். இந்நிலையில் ராஜசெல்வம் தனது தந்தையுடன் அடிக்கடி மேளம் அடிக்க செல்வது வழக்கம். சமீப காலமாக ராஜ செல்வம் வேலைக்கு ஒழுங்காக வருவதில்லை. இதனால் பன்னீர்செல்வம் தனது மகனை மேளம் அடிக்க அழைப்பதில்லை. இது தொடர்பாக தந்தைக்கும், மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து புகார் அளிப்பதற்காக பன்னீர்செல்வம் காவல் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ராஜ செல்வம் தனது தந்தையை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டி அரிவாளால் வெட்ட முயற்சி செய்துள்ளார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பன்னீர்செல்வம் அளித்த புகாரின் பேரில் வழக்கப்பதிவு செய்த போலீசார் ராஜ செல்வத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.