செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் இன்றைக்கு நாடு முழுவதும் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம்,  சனாதானத்தை முறியடிப்போம் என்கின்ற உறுதி மொழியை ஏற்று இருக்கின்றோம். அரசியலமைப்பு சட்டம் பழைய சனாதான சமூக கட்டமைப்பை தகர்க்கக் கூடிய ஒரு புதிய ஜனநாயக கோட்பாடாகும்.

ஆகவே சனாதான சக்திகளால் அரசியலமைப்பு சட்டம் இன்றைக்கு வலுவிழந்து வருகிறது. அதனை அவர்கள் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.  மென்மேலும் அதனை நீர்த்துப் போக செய்கின்ற சதி வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் அகில இந்திய அளவில் ஜனநாயக சக்திகள் ஊரணியில் திரள வேண்டி உள்ளது.

அதற்கு அடித்தளமாக தான் இந்தியா எனும் கூட்டணியும் உருவாகி இருக்கிறது. இந்தியா கூட்டணியின் நோக்கம் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதே  ஆகும். அதற்கு இன்றைக்கு ஆட்சி பீடத்தில் இருக்கக்கூடிய சனாதான சக்திகளை அப்புறப்படுத்துவதாகும். அத்தகைய இந்தியா கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமைப்படுகிறது  தெரிவித்தார்.