போக்குவரத்து விதிகளை மீறி ஹெல்மெட் அணியாமல் சென்ற GenZ இளைஞர் ஒருவருக்கு போக்குவரத்து காவலர்கள் அபராதம் (Challan) விதித்தனர். அபராதத்தை ஏற்றுக்கொண்ட அந்த இளைஞர், அங்கேயே நின்று அதே விதிகளை மீறும் காவலர்களைக் குறிவைக்கத் தொடங்கினார். அங்கு வந்த போக்குவரத்து காவலர்களின் இருசக்கர வாகனத்தில் நம்பர் பிளேட் சரியாக இல்லாததையும், அவர்கள் ஹெல்மெட் அணியாமல் இருந்ததையும் கவனித்த இளைஞர், அவர்களை நடுரோட்டில் தடுத்து நிறுத்தி ஆவேசமாக கேள்வி எழுப்பினார். “சட்டம் எனக்கு ஒரு மாதிரி, உங்களுக்கு ஒரு மாதிரியா?” என அவர் கேட்ட கேள்விகளும், காவலர்கள் அதற்குப் பதிலளிக்க முடியாமல் திணறியதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டவர், “GenZ இளைஞர்கள் மிகச்சிறந்தவர்கள் (Goated), அவர்கள் நிச்சயம் முந்தைய தலைமுறையினரின் (Boomers) தவறுகளைத் திருத்துவார்கள்” என்று பாராட்டியுள்ளார். ஊழல் செய்யும் அல்லது அதிகாரத்தைப் பயன்படுத்தும் அதிகாரிகளுக்குப் பாடம் புகட்ட இது போன்ற துணிச்சலான இளைஞர்களே தேவை என்றும், இப்போதுள்ள இளைஞர்கள் யாரையும் கண்டு அஞ்சுவதில்லை என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி “சட்டம் அனைவருக்கும் சமமே” என்ற விவாதத்தை மீண்டும் ஒருமுறை முன்னெடுத்துள்ளது.