திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி வனத்துறையினருக்கு கோதமங்கலம் பகுதியில் கிளி, ரெட் மியாஸ் குருவிகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி வனத்துறையினர் பெரும்பாறை பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் சோதனை நடத்திய போது கிளிகள் மற்றும் குருவிகளை கூண்டுகளில் அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

அவர்கள் கிளிகளை பிடிக்க வலை பயன்படுத்தியுள்ளனர். இதனையடுத்து வனத்துறையினர் வீட்டில் இருந்தவர்களிடம் விசாரித்த போது, அவர்கள் பழனி ஆவணி மூல வீதியில் வசிக்கும் மாரி கண்ணு(50), அவரது மனைவி பார்வதி(40) என்பது தெரியவந்தது. இவர்கள் தோட்ட பகுதியில் வலையை பயன்படுத்தி கிளி மற்றும் குருவிகளை பிடித்து விற்பனைக்காக வைத்திருந்தனர்.

இதனை தொடர்ந்து 70 ரெட் மியாஸ் குருவிகள், 40 கிளிகள், கூண்டுகள், வலை ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்து தம்பதியினருக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். பின்னர் பறவைகளை பழனி வனப்பகுதியில் திறந்து விட்டனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது, கிளி போன்ற சில பறவைகளை வீட்டில் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பறவைகளை யாரும் வாங்கவும், விற்கவும் கூடாது. அதனை மீறி வாங்கி வீட்டில் வளர்த்தால் அவரது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.