சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காலை 8 மணி வரை பனி மூட்டம் அதிகமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் நேற்று காலை பெங்களூரில் இருந்து வந்த விமானம் காலை 8.15 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது. ஆனால் பனிமூட்டம் காரணமாக ஓடுபாதை தெளிவாக தெரியவில்லை. இதனால் பெங்களூரு, துபாய் மற்றும் எத்தியோப்பியா விமானங்கள் தரையிறங்க முடியாமல் பெங்களூரு விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

மேலும் ஹைதராபாத், மும்பை, கொழும்பு, பெங்களூரில் இருந்து வந்த 4 விமானங்கள் வானிலேயே தொடர்ந்து வட்டமடித்து காலை 8.45 மணிக்கு ஒன்றன்பின் ஒன்றாக தரை இறங்கியது. இதனையடுத்து திருப்பி அனுப்பப்பட்ட 3 விமானங்கள் பெங்களூரில் இருந்து வரவழைக்கப்பட்டு சென்னையில் தாமதமாக தரையிறக்கப்பட்டதால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர்.