முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காலை நடைப்பயிற்சியின்போது அவருக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உடனடியாக அவரை அருகிலிருந்த துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரை அணிவகுக்கும் அமைச்சர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, முதல்வருக்கு அங்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் ஸ்டாலினுக்கு சிறிய உடல்நல பிரச்சனை காரணமாக மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும், அவர் தற்போது நலமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவர்கள், இரு நாட்கள் ஓய்வெடுக்க ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்திக்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மூத்த அமைச்சர் துரைமுருகன், மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் உள்ளிட்டோர் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றனர். தற்போது முதல்வர் மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பின் கீழ் ஓய்வெடுத்து வருகிறார். அவரின் உடல்நிலை குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என பொதுமக்கள் மற்றும் மீடியா வட்டாரங்களை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
