சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி கன்னிகாபுரம் பெரியார் தெருவில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி என்ற தாய் உள்ளார். இருவரும் ஆவடி பஜாரில் டீக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை கடையில் கியாஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் திடீரென தீ விபத்து ஏற்பட்டு கடை முழுவதும் வேகமாக பரவியது. இதனை பார்த்ததும் கடையில் நின்றவர்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

தீ விபத்தில்  பாபுவுக்கும் அவரது தாய்க்கும் கையில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் கடையில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.