திருச்சி மாவட்டத்தில் உள்ள சி.ஆர் பாளையத்தில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வந்துள்ளார். அவரிடம் பாரதிதாசன் என்பவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை பாரதிதாசன் லாரியை ஸ்ரீரங்கத்தில் இருக்கும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பரிசோதனைக்காக கொண்டு சென்றுள்ளார். இதனையடுத்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கரியமாணிக்கம் பிரிவு ரோடு அருகே சென்ற போது திடீரென லாரியின் டயர் வெடித்து புகை வர ஆரம்பித்தது.

இதனால் சுதாரித்துக் கொண்ட பாரதிதாசன் லாரியிலிருந்து கீழே குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சிறிது நேரத்தில் லாரி முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று லாரியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் தீ விபத்தில் லாரி முழுவதும் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.