பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குரும்பலூர் பேரூராட்சியில் கலியபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கவிமணி, காவியா என்ற 2 மகள்கள் இருக்கின்றனர். நேற்று கலியபெருமாள் வேலைக்கு சென்ற பிறகு சுமதி தனது பேரக்குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார்.

இந்நிலையில் கலியபெருமானின் வீட்டிலிருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் சமையல் அறையில் இருந்த பொருட்கள், பாத்திரங்கள் ஆகியவை எரிந்து நாசமானது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.