சேலம் மாவட்டத்தில் உள்ள பாப்பாம்பாடி கிராமத்தில் வெல்டிங் வேலை பார்க்கும் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரஷிதா என்ற மகளும், பிரவிஷ் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் பிரவிஷ் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜா தனது குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பதற்காக மனைவி, குழந்தைகளுடன் வீட்டிற்கு அருகில் இருக்கும் விவசாய கிணற்றுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து ராஜாவும், பிரவிஷும் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பிரவிஷ் ராஜாவின் கழுத்தை இறுக பிடித்துக் கொண்டதால் அவரால் நீச்சல் அடிக்க முடியவில்லை.

சிறிது நேரத்தில் இருவரும் தண்ணீரில் மூழ்கினர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரியாவும், பிரஷிதாவும் காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டனர். இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து கிணற்றில் குதித்து இருவரையும் தேடினர். இதுகுறித்து தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தந்தை மகனின் உடல்களை மீட்டனர். பின்னர் இருவரது உடல்களும் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.