நாடு முழுவதும் இணையதள வளர்ச்சியால் பண மோசடிகள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரைச் சேர்ந்த ஹரிஷ் பரத்வாஜ் என்பவர் திருமணித்திற்காக வரன் தேடுபவர்களை குறி வைத்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். இவர் பல்வேறு போலியான மேட்ரிமோனி தளங்களை உருவாக்கி, அதில் அழகான பெண்களின் புகைப்படங்களை பதிவிட்டு, திருமண வரன் தொடர்பான விளம்பரங்களையும் செய்துள்ளார். இதைப்பார்த்து அவரை தொடர்பு கொண்டவர்களிடம், ஆசை வார்த்தை கூறி திருமணம் ஏற்பாடு செய்யும் வரை உதவி செய்வதாக கூறியுள்ளார்.
இதற்காக பிலாஸ்பூர், அலிகார், வாரணாசி உள்ளிட்ட இடங்களிலும் மையங்கள் அமைத்து, அங்கு பணிப்பெண்ணை அமர்த்தி, வாடிக்கையாளர்களிடம் பேச வைத்துள்ளார். இதனால் வாடிக்கையாளர்கள் அவர்களின் பேச்சில் மயங்கி, பல லட்சம் ரூபாயை அனுப்பி உள்ளனர். இவர் மொத்தம் 500 பேரிடம் மோசடி செய்துள்ளார். இவரிடம் போபாலை சேர்ந்த 47 வயதான ஒருவர் ஒன்றரை லட்சம் ரூபாயை இழந்துள்ளார். அவர் தான் ஏமாந்ததை அறிந்து சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி காவல் துறையினர் விசாரணை நடத்திய போது, ஹரிஷ் பரத்வாஜ் செய்த மோசடி தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் மோசடி தொடர்பாக அவரது வங்கி கணக்கையும் முடக்கி வைத்துள்ளனர்.