கடந்த மாதம் பிப் 27-ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 பேர் இதில் போட்டியிட்டனர். 238 வாக்குச்சாவடிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணும்  பணியானது  இன்று (மார்ச் 2) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், 2 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றது.

இந்நிலையில் 3-வது சுற்று வாக்கு எண்ணிக்கை திடீரென நிறுத்தப்பட்டது. இதனையடுத்து தேர்தலின் முதல் சுற்று முடிவுகளை அறிவித்த பின்னர், 3-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அம்மாவட்ட தேர்தல் அலுவலர் கிருஷ்ணனுண்ணி அறிவித்தார். அதன்படி, முதல் சுற்று முடிவில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 8429 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தென்னரசு 2873 வாக்குகளும் பெற்றுள்ளார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிள்ளது.