தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் வாயிலாக அத்தியாவசியப் பொருட்கள் மலிவு விலையில் கொடுக்கப்படுகிறது. இலவச அரிசி மட்டுமின்றி எண்ணெய், பருப்பு, கோதுமை, தீப்பெட்டி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே புது ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு கால தாமதம் ஆவதாக புகார்கள் வருகிறது. அதாவது புதிய ரேஷன் கார்டு கிடைக்க 3 – 6 மாதங்கள் வரை விண்ணப்பதாரர்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இப்பிரச்சனைகளை போக்க மாவட்ட நிர்வாகங்கள் சார்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சிக்கலை போக்க தற்போது திருப்பூர் மாவட்டத்திலேயே ரேஷன் அட்டை அச்சிடப்பட்டு உரிய பயனாளிகளுக்கு உடனே கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலின் படி நடைபெறும் இந்த பணிகளில் புது விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலுடன் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. சென்ற 2 வாரங்களாக நிலுவையிலிருந்த ரேஷன் கார்டு விண்ணப்பங்களை மும்முரமாக குடிமைப்பொருள் அதிகாரிகள் பரிசீலித்து உரிய பயனாளிகளுக்கு ரேஷன் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆகவே இனிமேல் திருப்பூரில் வெறும் 15 தினங்களில் புது ரேஷன் கார்டு கிடைத்துவிடும்.