ஈரோடு மாவட்டத்திலுள்ள காளிகுளம் புது தோட்டத்தில் விவசாயியான மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் உக்கரம் மின்வாரிய அலுவலகத்தில் தனது கோழிப் பண்ணைக்கு மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளார். அப்போது வணிக உதவியாளரான சுந்தரம் என்பவர் மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றால் 3000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என மூர்த்தியிடம் கேட்டுள்ளார். இதுகுறித்து மூர்த்தி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி மூர்த்தி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சுந்தரத்திடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சுந்தரத்தை கையும், களவுமாக கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.