தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பூக்கார விலாஸ் சாலை அன்பு நகர் 5வது தெருவில் ஜெகதீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு ஜெகதீஸ்வரனின் தந்தை ஜெய் சிங் உயிரிழந்தார். அவரது தாய் தேவி 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் ஜெகதீஸ்வரன் தந்தை வழிபாட்டியான க்ளோரின் பராமரிப்பில் இருந்தார். அவர் தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எந்திரவியல் படித்து வருகிறார்.

இந்நிலையில் பெற்றோரை இழந்து வாடும் ஜெகதீஸ்வரன் கல்வி கட்டணம் கூட செலுத்த முடியாமல் சிரமப்படுவதாகவும், தனக்கு உதவி அளிக்குமாறும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார். இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்ததன் அடிப்படையில் அந்த மனு வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியின் மூலம் தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளைக்கு அனுப்பப்பட்டது.

பின்னர் ஜெகதீஸ்வரன் கேட்ட கல்வி கட்டணம் காசோலையாக ஜோதி அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது. அதனை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் ஆய்வாளர் தியாகராஜன் ஜெகதீஸ்வரனிடம் கொடுத்துள்ளார். மேலும் ஜோதி அறக்கட்டளை சார்பில் மாணவரின் குடும்பத்திற்கு 26 கிலோ அரிசி ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.