டி20 உலகக் கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுமா? என்ற இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வந்து, வரும் பிப்ரவரி 15-ம் தேதி கொழும்பில் போட்டி நடப்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் தனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்த ஒரு வீடியோ கிரிக்கெட் உலகில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில் பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா பேசுவது போலவும், அதில் “பாகிஸ்தானை விளையாட வைக்க பிசிசிஐ பலமுறை கெஞ்சிக் கேட்டுக்கொண்டது” என்பது போன்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

ஆனால், இதன் பின்னணியை ஆராய்ந்தபோது தான் அது ஒரு போலியான ‘டீப்ஃபேக்’ (Deepfake) வீடியோ என்பது தெரியவந்தது. உண்மையான வீடியோவில், “ஐசிசி மற்றும் பாகிஸ்தான் வாரியம் இடையே சுமூகமான பேச்சுவார்த்தை நடந்து தீர்வு கிடைத்துள்ளது” என்று தான் ராஜீவ் சுக்லா பேசியுள்ளார்.

ஆனால், ஏஐ (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவரது பேச்சை பாகிஸ்தானுக்குச் சாதகமாக சோயப் மாலிக் மாற்றியுள்ளார். ஒரு சீனியர் வீரர் இப்படிப் பொறுப்பற்ற முறையில் போலி வீடியோவை பகிர்ந்ததற்கு இந்திய ரசிகர்கள் மற்றும் பிசிசிஐ தரப்பில் கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.