இந்தியாவில் பல பெண்களுக்குக் காதலிப்பது என்பது பயணத்தில் ஒரு பாதியாகும். சாதி அல்லது சமூக எதிர்பார்ப்புகளை மீறும் உறவாக இருந்தால், பெற்றோரிடம் காதலைப் பற்றிச் சொல்லும் போது தான் உண்மையான சவாலே ஆரம்பமாகிறது. இந்தச் சூழலில் இன்ஸ்டாகிராமில் ஒரு காணொலியைப் பகிர்ந்த திருஷ்டி என்பவர், பல ஆண்டுகளாக மறைத்து வைத்த தனது காதலைப் பற்றித் தனது தந்தையிடம் கூறத் தயங்கி, பதட்டத்துடன் அவர் கையைப் பிடித்துக்கொண்டு நின்றார்.
View this post on Instagram
பல ஆண்டுகள் கழித்து, “அப்பா, இத்தனை வருஷமா சொல்லணும்னு நினைச்சேன், இப்பதான் சொல்றேன். எனக்கு ஒரு காதலன் இருக்கார்… அதுவும் பதினொரு வருஷமா” என்று அவர் தடுமாற்றத்துடன் கூறினார். இதனால் கோபப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவரது தந்தை, “எல்லாருக்கும் இருக்கும், இதில் பயப்பட என்ன இருக்கு” என்று நிதானமான பதிலைக் கூறியது திருஷ்டிக்கு பெரும் ஆச்சரியத்தையும் நிம்மதியையும் அளித்தது.
இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், அவர் தனது காதலன் விவேக்கின் பெயரைச் சொன்னதும், தனது மகளின் காதலைப் பற்றி ஏற்கனவே தெரியும் என்று தந்தை புன்னகையுடன் கூறியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இதன்பிறகு அவர், “இது ஒரு நல்ல செய்தி” என்று கூறி, அவர்கள் இருவரும் சுதந்திரமாக சம்பாதிப்பவர்கள் என்றும், அவர்களின் வாழ்க்கை அவர்கள் கையில் உள்ளது என்றும் கூறினார். மணவாழ்க்கைக்குச் சரியான துணையைத் தேர்ந்தெடுப்பது முக்கியம் என்றும், சாதி, மதம், பணம் ஆகியவற்றைக் காட்டிலும் அன்பு, மரியாதை மற்றும் நல்ல மனிதநேயம் ஆகியவையே ஒருவருடன் வாழ்நாள் முழுதும் இருப்பதற்கு அவசியமான குணங்கள் என்றும் அந்தத் தந்தை பெருந்தன்மையுடன் கூறியது பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
