ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மங்கலத்தில் கோவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு உமாமகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரவீன் சுந்தர் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கோவிந்தன் தனது மனைவி மற்றும் மகனுடன் திருச்சி வழியாக காரில் திருவண்ணாமலை நோக்கி ஆன்மீக சுற்றுலா சென்று கொண்டிருந்தார். புதுக்கோட்டை அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக காரும் எதிரே வந்த கனரக ஆட்டோவும் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த கோவிந்தனும், உமா மகேஸ்வரியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிரவீன் சுந்தர், ஆட்டோ டிரைவர் கௌதம் ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.