கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு அண்ணா நகர் பகுதியில் வேலுச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிணத்துகடவில் இருந்து கோவை செல்லும் சாலையில் பெட்ரோல் பங்க் பம்ப் ஆப்ரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு அருண்குமார் என்ற மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். நேற்று வேலுசாமி தனது மனைவியுடன் ஸ்கூட்டரில் சமாதி பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த கார் ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த வேலுச்சாமி, சாந்தி ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கணவன், மனைவி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காரை ஓட்டி வந்த பிரபு, அவரது மனைவி ரமா ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.