சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளர் தங்கவேலுக்கு பாமக கட்சியின் தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் பெரியார் பல்கலைக்கழக ஊழலுக்கு எதிராக போராடும் ஆசிரியர் சங்கத் தலைவரை  பழிவாங்க முயலுவதா.? பதிவாளரை நீக்க வேண்டும். பல்வேறு கோரரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர்கள் சங்கத்தினர் நடத்திய அறவழிப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியநாதன் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடாது என்று விளக்கம் அளிக்க கோரி பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் தங்கவேலு குறிப்பாணை அனுப்பியுள்ளது கண்டிக்கத்தக்கது.

பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் என்ற முறையில் வைத்தியநாதன் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் சங்க தலைவர் என்ற முறையில் தான் வைத்தியநாதன் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். தெழிற்சங்கத்தின் விதிகள் மற்றும் உரிமைகளின் படி இதில் எந்த தவறும் இல்லை. அவருக்கு குறிப்பானை அனுப்பியுள்ளது அப்பட்டமான பழிவாங்கும் செயல். பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வைத்தியநாதன் சாட்சியளிக்க இருக்கிறார். அதை தடுக்கும் நோக்கத்துடன் அவரை அச்சுறுத்துவதற்காகவே இந்த குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன்.

பெரியார் பல்கலைக்கழகத்தின் ஊழல் மற்றும் முறைகேடுகளில் பேராசிரியர் தங்கவேலு சம்பந்தப்பட்டுள்ளார். அப்படிப்பட்டவரை பொறுப்பு பதிவாளராக நியமித்தது தவறு. அவருடைய பழி வாங்கலை அனுமதிப்பது அதைவிட பெரிய தவறு. எனவே பேராசிரியர் வைத்தியநாதனுக்கு அனுப்பப்பட்டுள்ள குறிப்பாணையை திரும்ப பெறவும் பழிவாங்கும் நோக்கில் செயல்படும் பேராசிரியர் தங்கவேலுவை பதிவாளர் பொறுப்பில் இருந்து நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்திக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.