ராஜஸ்தானில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஜெய்ப்பூர், பூண்டி, கோட்டா, சவாய் மாதோபூர், கரௌலி ஆகிய பகுதிகளில் இடைவிடாத மழை காரணமாக சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை வரை பல இடங்களில் 10 சென்டிமீட்டருக்கும் அதிக மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இந்த கனமழையால், ஜெய்ப்பூரில் உள்ள புகழ்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க அமீர் கோட்டையின் சுமார் 200 அடி நீளமான சுவர் இன்று இடிந்து விழுந்தது. இந்த வீடியோ இணையத்தில் பரவலாக பரவி வருகிறது. இச்சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் இல்லாதது பெரிய அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது.

16ஆம் நூற்றாண்டில் முதலாம் மான்சிங் அரசரால் கட்டப்பட்ட அமீர் கோட்டை, ராஜபுத்திர கலையின் சிறப்பான கட்டிடதொழில்நுட்பத்தைக் கொண்டு உலக புகழ் பெற்றது. 2013ஆம் ஆண்டு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக இந்த கோட்டை அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஏற்பட்ட சேதம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், கோட்டையின் மீதான பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.