புதுக்கோட்டை  மாவட்டம் ஆலங்குடி பகுதியில் வசிக்கும் ஒரு இளம்பெண் திருமண தகவல் மையத்தில் மாப்பிள்ளை தேடும் நோக்கில், தன் விவரங்களை அதில் பதிவிட்டிருந்தார். உடனே இதைப் பார்த்த வேலூர் காந்திநகரைச் சேர்ந்த முகமது உபேஸ் (37) என்பவர், அந்த பெண்ணிடம் தொடர்பு கொண்டு ‘திருமண தகவல் மையத்தில் புகைப்படத்தை பார்த்து, எனக்கு உன்னை மிகவும் பிடித்து இருக்கிறது’ என கூறியுள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணிடம் உபேஸ் நேரில் சந்திக்க ஆசைப்படுவதாக கூறி, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் சந்திக்கலாம் என தெரிவித்துள்ளார். அதற்கு சம்மதம் தெரிவித்த அந்த பெண், கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி சென்னை வந்துள்ளார். பின்  ராயப்பேட்டையில் உபேசை சந்தித்து பேசியபோது, அவர் தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதால், உன் நகையை கொடு, பின் திருமணத்தின் போது அந்த நகையை திருப்பி   தருகிறேன் என கூறியுள்ளார். உடனே இதை நம்பிய அந்த பெண்ணும், தான் அணிந்திருந்த 20 பவுன் நகையை அவரிடம் கொடுத்துள்ளார்.

அதன் பிறகு உபேஸ் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். அப்போது தான், அந்த நபரால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த, அப்பெண் காவல் நிலையத்தில் புகார் செய்தார். எனவே இது குறித்து   வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அதில் உபேஸ், சேலம், கோவை பகுதியில் சுற்றி திரிந்தது தெரிய வந்தது. ஆனால் ஈரோட்டில் வைத்து உபேஸை கைது செய்த தனிப்படை போலீசார் சென்னைக்கு அழைத்து வந்து, அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் நீண்ட நாள் திருமணம் ஆகாத பெண்கள் மற்றும் விதவை பெண்களை குறிவைத்து அந்த நபர் திருமணம் ஆசைகளை காட்டி நகை-பணம் வாங்கி ஏமாற்றியது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து 1 லட்ச ரூபாய் பணம் மற்றும் 1½ பவுன் நகையை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.