சென்னை மாவட்டத்தில் உள்ள அசோக் நகரில் ராகவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சைதாப்பேட்டையில் இருக்கும் சைபர் கிரைம் பிரிவு போலீசில் சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பாண்டீஸ்வரி என்ற மனைவியும், அட்சயா என்ற மகளும் இருக்கின்றனர்.

இந்நிலையில் ராகவன் தனது மனைவி, மகள், உறவினர்களான சரவணன், ராஜேஷ் ஆகியோருடன் காரில் நேற்று முன்தினம் சொந்த ஊரான மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள கழுதூர் அருகே சென்ற போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற லாரி மீது கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ராகவன், சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராஜேஷ், பாண்டீஸ்வரி, அட்சயா ஆகிய மூன்று பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். பாண்டீஸ்வரிக்கும் அட்சயாவுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.