திருச்சியில் நேற்று ஓ. பன்னீர்செல்வம் சார்பில் முப்பெரும் விழா மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு ஓபிஎஸ் ஆக்ரோஷமாக பேசியுள்ளார். இந்த மாநாடு அதிமுகவினர் மத்தியில் சலசலப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருச்சி மாநாட்டின் போது ஓபிஎஸ் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக தாக்கி பேசினார். அவர் பேசியதாவது, தனக்குத்தானே கழகத்தின் பொதுச்செயலாளராக முடி சூட்டிக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்டம் அதிகரித்துவிட்டது. புரட்சித்தலைவர் என்றால் அவருக்கு ஒரு அடையாளம் இருக்கிறது. அந்த அழகான கண்ணாடி மற்றும் தொப்பி ஆகியவைகளை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அணிந்தால் தான் அழகு. ஆனால் புரட்சித்தலைவர் போன்று தொப்பி மற்றும் கண்ணாடி அணிந்து கொண்டு கேமரா முன்பு போஸ் கொடுக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

இது எவ்வளவு பெரிய அநியாயம். நீங்களும் புரட்சித் தலைவரும் ஒன்றா.? அவருடைய கால் தூசிக்கு கூட பெற மாட்டீர்கள். அவர் ஒரு கருணைக்கடல், அன்பு தெய்வம், கொடை வள்ளல். இந்த இயக்கத்தை தனக்கு பின்னால் வழிநடத்துபவர் ஜெயலலிதா தான் என்று தீர்க்கதரிசனமாக காட்டிவிட்டு சென்றார். அப்படிப்பட்ட எம்.ஜி.ஆருக்கும் உங்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா. சாதாரண தொண்டனும் தலைமை பதவிக்கு வர வேண்டும் என்ற எம்ஜிஆரின் கொள்கைகள் மாற்றப்பட்டுள்ளது. கட்சியின் அடிப்படை சட்டத்தை மாற்றியது எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் செய்த மிகப்பெரிய பச்சை துரோகம். மேலும் இப்படிப்பட்ட துரோகம் செய்த ஒருவரை கட்சியில் இருக்க விடலாமா என்பதை தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.