கடலூர் மாவட்டத்தில் உள்ள ராசாபாளையம் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிங்காரவேலு, ராஜு என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். அதே பகுதியில் பெற்றோரை இழந்த 14 வயது சிறுமி உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு வீட்டில் சிறுமி தனியாக இருந்தபோது ராஜு அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து சிறுமி தனது உறவினர்களிடம் கூறி கதறி அழுதுள்ளார். அதன் பிறகு சிறுமி மற்றொரு உறவினர் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அப்போது சிங்காரவேலுவும் சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதுகுறித்து சிறுமி விருதாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் சிங்காரவேலு மற்றும் ராஜு ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த கடலூர் சிறப்பு நீதிமன்றம் ராஜூவுக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், சிங்காரவேலுவுக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.