கொலை முயற்சி வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விடுவித்தது தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம். 2011ம் ஆண்டு திமுகவின் இரு குழுவினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சுரேஷ் உள்ளிட்டோர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கடந்த 2011 ஆம் ஆண்டு திமுகவினர் இரண்டு கோஷ்டிகளாக செயல்பட்டு வந்த நிலையில் திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனுக்கும், ஆறுமுகநேரியை சேர்ந்த நகர திமுக செயலாளர் சுரேஷ் என்பவருக்கும் தேர்தல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம்  திமுக நகர செயலாளர் உள்ளிட்டவர் மீது கொலை வெறி தாக்குதல், பெட்ரோல் குண்டு வீச்சு, கார் எரிப்பு போன்ற சம்பவம் நடைபெற்றது. இந்த கொலை முயற்சி வழக்கு சம்பந்தமாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சிலர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி கொலை முயற்சி வழக்கில் இருந்து  மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை  அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விடுவித்துள்ளார். குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.